Friday, 22 April 2011

'போர்க் குற்றவாளி' ராஜபக்சேவின் பெயரை நீக்கியது டைம்!!



லண்டன்: உலகின் மிகுந்த சக்திவாய்ந்த 100 விவிஐபிகளில் ஒருவராக டைம்ஸ் பத்திரிகையால் பட்டியலிடப்பட்டிருந்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே பெயர், இப்போது பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

ஐநா அறிக்கையில் ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள் பட்டியலிடப்பட்டிருந்த காரணத்தாலும், ரஷ்யா, சீனா, இந்தியா தவிர பிற சர்வதேச நாடுகள் ஒருமுகமாக ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி என்று குற்றம் சாட்டிவருவதாலும் அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

உலகின் பிரபலமான, செல்வாக்கு மிக்க 100 நபர்களை ஆண்டுதோறும் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்வது டைம் பத்திரிகையின் வழக்கம். இந்தப் பட்டியலில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இவருக்கு நான்காவது இடம் தரப்பட்டிருந்தது. அவருக்கு மொத்தம் 238908 வாக்குகள் பதிவாகியிருந்தன. இவற்றில் 44428 வாக்குகள் மகிந்தவுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டிருந்தன. 

இந்தப் பட்டியலிலேயே எதிர்வாக்குகள் அதிகமாகப் பெற்றிருந்தவர் ராஜபக்சே ஒருவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, போர்க்குற்றவாளி என உலக நாடுகளால் குற்றம் சாட்டப்பட்டு, சர்வதேச போர்க்குற்ற நீதிமன்ற விசாரணைக்கு காத்திருக்கும் ராஜபக்சே பெயரை செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் சேர்த்ததற்கு உலகமெங்கிலுமிருந்து கண்டனங்கள் குவிந்தன. 

இந்நிலையில், டைம் இதழின் ஆன்லைன் வாக்குப் பதிவு நேற்று முடிந்தது. இறுதிப் பட்டியல் இப்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.  


ராஜபக்சே பெயர் இல்லை!!

ஐநா நிபுணர் குழு அறிக்கையில் ராஜபக்சே அரசு மற்றும் படையினரின் போர்க்குற்றங்கள் வரிசையாக பட்டியலிடப்பட்டிருந்தன. உலகில் அத்தனை மோசமான ரசாயண குண்டுகளையும் பயன்படுத்தி லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றார்கள் என ராஜபக்சே அரசு மீது அழுத்தம் திருத்தமாக ஆதாரங்களுடன் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இறுதி நாட்களில் மட்டும் 40000 தமிழர்கள் வன்னியில் கொல்லப்பட்டதை அந்த அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

இத்துடன், ஐநாவிடம் அறிவித்த பிறகு இலங்கை ராணுவத்திடம் சரணடைய வந்த தமிழர் தலைவர்களை எரித்துக் கொன்றதற்கான சாட்சியங்களும், புலிகளின் பெண் போராளிகளை கொடூரமாக ராணுவம் சிதைத்ததற்கான ஆதாரங்களையும் சேனல் 4 மற்றும் அல்ஜஸீரா தொலைக்காட்சிகள் அடுத்தடுத்து வெளியிட்ட வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்த வாரம் முழுவதும் சேனல் 4, பார்ப்பவரின் இதயங்களை அதிர்ச்சியில் உறைய வைக்கும் இலங்கை ராணுவத்தின் கொடிய செயல்களுக்கு ஆதாரங்களை வெளியிட்டு வருகிறது.

இந்தப் பின்னணியில் ராஜபக்சே பெயர் டைம் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. 

ஐநா நிபுணர் குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும்போது, இலங்கை அதிபர் என்ற பட்டியலிலிருந்தே ராஜபக்சே பெயர் நீக்கப்படுமோ!

--------------------------------------------------------------------------------------
  இந்தியாவிலிருந்து இராணுவ உதவிகள் முதல் அரசியல் ஆலோசனைகள் வரை,இலங்கை அதிபருக்கு பரிமாறப்படுகிறது என்று,தமிழகத்திலிருந்து மட்டுமின்றி,இந்தியா மற்றும் உலக அரங்குகளில் எத்தனையோ அமைப்புகளின் சார்பில் குரல்கள் எதிரொலித்தன.ஆனால் அப்போதெல்லாம் வாய்மூடி மௌனியாக இருந்த இந்திய அரசு,இபபோது இலங்கை தமிழர்களிடம் மன்னிப்புக் கோரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
 இனியாவது இந்தியஅரசு,தனது மறைமுக மற்றும் நேரடி உதவிகளை நிறுத்திக் கொள்ளுமா..?,

 இல்லை..எப்போதும் போல இந்தியஅரசு, தேர்தலிலும் நிற்காத..ஓட்டும் போடாத பிரதமர் மன்மோகன் சிங்கின் வாயால் சமாதானம் சொல்லுமா..?.

 இந்தியாவின் பாதுகாப்புக்காகத்தான்,இலங்கை அரசுக்கு உதவிவருவதாக இந்திய அரசும் அதிகாரிகளும் இதுவரை சொன்ன காரணங்கள் போதும்..,ஒரு நாட்டுமக்களைக் கொன்றுதான் இன்னொரு நாடு வாழவேண்டும் என்ற மன்னர் காலத்து மிருகஅரசியல் இனியும் வேண்டாமே..!.உயிர் என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான்.அது இந்தியாவாக இருந்தால் என்ன.? இலங்கையாக இருந்தால் என்ன..?.

எத்தியோப்பியாவுக்கு சென்று கடல் கொள்ளையர்களைப் பிடிக்கும் இந்திய அரசின் கப்பற்படை,இங்கேயுள்ள இந்திய,தமிழக மீனவர்களைக் கொல்லும் இலங்கை அரசின் ராணுவத்தை முடக்க முடியவில்லை என்பது யார் காதில் பூ சுற்றும் வேலை என்ற மக்களின் கேள்விகள் மத்தியஅரசின் காதில் விழவில்லையா..?




No comments:

Post a Comment