Thursday, 28 April 2011

2ஜி

                                                                         


2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் தொடர்புடைய 5 தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ரூ. 10,000 கோடி சொத்துக்கள் விரைவில் முடக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது. ஆனால், அந்த நிறுவனங்கள் எவை என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

இந்த ஊழல் தொடர்பாக உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் முன்னேற்றங்கள் குறித்த விவரங்களை அவ்வப்போது இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வருகின்றன.

அமலாக்கப் பிரிவு நடத்திய விசாரணைகள் குறித்த லேட்டஸ்ட் அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமலாக்கப் பிரிவு சார்பில் அதன் வழக்கறிஞர் வேணுகோபால் இந்த அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய வேணுகோபால், ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ஈடுபட்ட 5 செல்போன் நிறுவனங்கள் பண பரிவர்த்தனை மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ளன. இதன்மூலம் ஒவ்வொரு நிறுவனமும் தலா ரூ. 2,000 கோடி அளவுக்கு முறைகேடாக லாபம் அடைந்துள்ளன. இதில் முதல் கட்டமாக 2 நிறுவனங்களின் தலா ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை (மொத்தம் ரூ. 4,000 கோடி) முடக்க உள்ளோம் என்றார்.

இந்த சொத்துக்களில் அசையும், அசையா சொத்துக்கள் அடங்கியுள்ளதாகத் தெரிகிறது.

ஆனால் அமலாக்கப் பிரிவு சொத்துக்களை முடக்கவுள்ள அந்த 5 நிறுவனங்கள் எவை எவை என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

இந்த நடவடிக்கை மூலம் ஸ்பெக்ட்ரம் முறைகேடு மூலம் மத்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்பை அந்ததந்த நிறுவனங்களிடமிருந்து திரும்பப் பெறும் நடவடிக்கையை அமலாக்கப் பிரிவினர் தொடங்கியுள்ளனர். ஆனால், இந்த நிறுவனங்கள் குற்றம் செய்ததாக நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கிய பின்னரே அந்த சொத்துக்களை அதிகாரப்பூர்வமாக கையகப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமலாக்கப் பிரிவினர் அடையாளம் கண்டுள்ள 5 நிறுவனங்களில் தலா ரூ. 2,000 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டால் அரசுக்கு ரூ. 10,000 கோடி திரும்பி வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் அமலாக்கப் பிரிவினர் சொத்துக்களை முடக்கவுள்ள முதல் இரண்டு நிறுவனங்கள், யுனினார் செல்போன் நிறுவனத்தை நடத்தி வரும் 'யுனிடெக் வயர்லெஸ்' மற்றும் ஷாகித் உசேன் பல்வாவின் 'ஸ்வான் டெலிகாம்' என்று தெரிகிறது.

இதில் யுனிடெக் நிறுவனம் ரூ.2,480 கோடி மதிப்புள்ள ஸ்பெக்ட்ரத்தை ரூ.138 கோடி மட்டும் தந்து அடிமாட்டு விலைக்கு வாங்கியது.

இந்த இரு நிறுவனங்கள் தவிர, சொத்துக்கள் முடக்கப்படவுள்ள பிற நிறுவனங்கள், லூப்டெலிகாம், லூப் மொபைல், எஸ்.டெல் ஆகியவை என்று தெரிகிறது.

இந் நிலையில் தொழில் தரகர் நீரா ராடியா தனது சகோதரி தனது பெயரில் விர்ஜின் தீவில் உள்ள வங்கிகளில் பல்லாயிரம் கோடியை முதலீடு செய்துள்ளதையும் அமலாக்கப் பிரிவு கண்டுபிடித்துள்ளது. இது ஸ்பெக்ட்ரம் ஊழல் பணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. இதற்காக அந்த நாட்டில் 5 நிறுவனங்களை ஆரம்பித்துள்ளார் ராடியா.

Friday, 22 April 2011

ஏழைக்கு ஒரு இந்தியா, பணக்காரருக்கு ஒரு இந்தியாவா? - உச்சநீதிமன்றம்



இந்தியாவை சக்திவாய்ந்த நாடு என்று நீங்கள் கூறிக்கொள்கிறீர்கள். அதே நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பட்டினிச்சாவுகள் நடைபெற்று வருகின்றன. ஏழைக்கு ஒரு இந்தியா, பணக்காரருக்கு ஒரு இந்தியாவா?, என்று கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.

நாடு முழுவதும் நியாய விலைக்கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த பொது வினியோக திட்டத்தில் பெரிய அளவில் ஊழலும் முறைகேடும் நடைபெறுவதாக மக்கள் உரிமைக்கான சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன், பொது வினியோக திட்டத்தை சீரமைப்பதற்காக அரசு மேற்கொண்ட முயற்சியால் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினை பெருமளவில் குறைந்து வருவதாகக் குறிப்பிட்டார்.

ஏழை - பணக்காரனுக்கு தனித்தனி இந்தியாவா?

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் நாட்டில் பெருகிவரும் பட்டினிச்சாவு குறித்து தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டனர். பணக்காரர்களுக்கு ஒன்று ஏழைகளுக்கு ஒன்று என இரண்டு இந்தியா இருக்க முடியாது என்றும் கருத்து தெரிவித்தனர். 

மேலும் கூறுகையில், "இந்தியாவை சக்திவாய்ந்த நாடு என்று நீங்கள் கூறிக்கொள்கிறீர்கள். அதே நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பட்டினிச்சாவுகள் நடைபெற்று வருகின்றன. நாட்டில் அமோக விளைச்சல் ஏற்பட்டு கிடங்குகளில் உணவு தானியங்கள் நிரம்பி வழிவதாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.

இது நமக்கெல்லாம் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்கிறபோது என்ன பிரயோஜனம்? பட்டினியால் ஆயிரக்கணக்கானவர்கள் இறக்கும்போது, நாட்டில் தேவையான உணவுபொருட்கள் இருப்பில் உள்ளதாக அரசு கூறுவதன் தர்க்க நியாயம் என்ன? என்று புரியவில்லை.

ஊட்டச்சத்து குறைபாடு குறைந்து வருவதாக நீங்கள் கூறுவதற்கு என்ன அர்த்தம்? ஊட்டச்சத்து குறைபாடு முழுமையாக நாட்டில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும். நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்கள் 36 சதவீதம் என்று எந்த அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது? இதற்கு திட்ட கமிஷன் விளக்கம் அளிக்க வேண்டும்.

கடந்த 1991-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், தற்போது 2011-ம் ஆண்டில் நாட்டின் மக்கள் தொகையில் 36 சதவீதம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பதாக நிர்ணயித்து இருப்பது திகைப்பை அளிக்கிறது.

காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள் உள்பட பல்வேறு மாநிலங்கள், இந்த சதவீதம் அதிகமாக இருக்கும் என்றும், அதற்கு ஏற்ப கூடுதல் உணவு தானியங்களை ஒதுக்க வேண்டும் என்று கோரி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்து உள்ளன.

இந்த வருவாய் போதாதே!

ஒவ்வொரு மாநிலங்களிலும் தனிநபர் வருவாய் மாறுபடும்போது எந்த அடிப்படையில் 36 சதவீதம் என்ற அளவை திட்ட கமிஷன் நிர்ணயித்துள்ளது? நகர்ப் புறங்களில் தனி நபர் வருமானம் நாள் ஒன்றுக்கு 20 ரூபாய் என்றும், கிராமங்களில் 11 ரூபாய் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் கூட இந்த வருவாய் போதாத நிலையில், எப்படி இந்த குறைந்த அளவு தொகையை வறுமைக்கோட்டிற்கான அடிப்படையாக நிர்ணயம் செய்தீர்கள்? இது குறித்து திட்ட கமிஷன் துணை தலைவர் ஒரு வாரத்திற்குள் விளக்கமான ஒருங்கிணைந்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்'', என்றனர்.

தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில், நாடு முழுவதிலும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் எத்தனை சதவீதம் என்பது குறித்தும் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்கும்படியும், மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ரூ.35 ஆயிரம் கோடி ஊழல்

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டும் பொது வினியோக திட்டத்தில் ரூ.35 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்து இருப்பது அம்பலமாகி உள்ளது.

இது தொடர்பாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.பி. வாத்வா தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தனது அறிக்கையில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு மானிய விலையில் வழங்கப்படும் உணவு தானியங்களில் பெரிய அளவில் கள்ள மார்க்கெட்டுக்கு திருப்பி விடப்படுவதாக குற்றம்சாட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

'போர்க் குற்றவாளி' ராஜபக்சேவின் பெயரை நீக்கியது டைம்!!



லண்டன்: உலகின் மிகுந்த சக்திவாய்ந்த 100 விவிஐபிகளில் ஒருவராக டைம்ஸ் பத்திரிகையால் பட்டியலிடப்பட்டிருந்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே பெயர், இப்போது பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

ஐநா அறிக்கையில் ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள் பட்டியலிடப்பட்டிருந்த காரணத்தாலும், ரஷ்யா, சீனா, இந்தியா தவிர பிற சர்வதேச நாடுகள் ஒருமுகமாக ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி என்று குற்றம் சாட்டிவருவதாலும் அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

உலகின் பிரபலமான, செல்வாக்கு மிக்க 100 நபர்களை ஆண்டுதோறும் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்வது டைம் பத்திரிகையின் வழக்கம். இந்தப் பட்டியலில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இவருக்கு நான்காவது இடம் தரப்பட்டிருந்தது. அவருக்கு மொத்தம் 238908 வாக்குகள் பதிவாகியிருந்தன. இவற்றில் 44428 வாக்குகள் மகிந்தவுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டிருந்தன. 

இந்தப் பட்டியலிலேயே எதிர்வாக்குகள் அதிகமாகப் பெற்றிருந்தவர் ராஜபக்சே ஒருவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, போர்க்குற்றவாளி என உலக நாடுகளால் குற்றம் சாட்டப்பட்டு, சர்வதேச போர்க்குற்ற நீதிமன்ற விசாரணைக்கு காத்திருக்கும் ராஜபக்சே பெயரை செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் சேர்த்ததற்கு உலகமெங்கிலுமிருந்து கண்டனங்கள் குவிந்தன. 

இந்நிலையில், டைம் இதழின் ஆன்லைன் வாக்குப் பதிவு நேற்று முடிந்தது. இறுதிப் பட்டியல் இப்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.  


ராஜபக்சே பெயர் இல்லை!!

ஐநா நிபுணர் குழு அறிக்கையில் ராஜபக்சே அரசு மற்றும் படையினரின் போர்க்குற்றங்கள் வரிசையாக பட்டியலிடப்பட்டிருந்தன. உலகில் அத்தனை மோசமான ரசாயண குண்டுகளையும் பயன்படுத்தி லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றார்கள் என ராஜபக்சே அரசு மீது அழுத்தம் திருத்தமாக ஆதாரங்களுடன் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இறுதி நாட்களில் மட்டும் 40000 தமிழர்கள் வன்னியில் கொல்லப்பட்டதை அந்த அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

இத்துடன், ஐநாவிடம் அறிவித்த பிறகு இலங்கை ராணுவத்திடம் சரணடைய வந்த தமிழர் தலைவர்களை எரித்துக் கொன்றதற்கான சாட்சியங்களும், புலிகளின் பெண் போராளிகளை கொடூரமாக ராணுவம் சிதைத்ததற்கான ஆதாரங்களையும் சேனல் 4 மற்றும் அல்ஜஸீரா தொலைக்காட்சிகள் அடுத்தடுத்து வெளியிட்ட வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்த வாரம் முழுவதும் சேனல் 4, பார்ப்பவரின் இதயங்களை அதிர்ச்சியில் உறைய வைக்கும் இலங்கை ராணுவத்தின் கொடிய செயல்களுக்கு ஆதாரங்களை வெளியிட்டு வருகிறது.

இந்தப் பின்னணியில் ராஜபக்சே பெயர் டைம் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. 

ஐநா நிபுணர் குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும்போது, இலங்கை அதிபர் என்ற பட்டியலிலிருந்தே ராஜபக்சே பெயர் நீக்கப்படுமோ!

--------------------------------------------------------------------------------------
  இந்தியாவிலிருந்து இராணுவ உதவிகள் முதல் அரசியல் ஆலோசனைகள் வரை,இலங்கை அதிபருக்கு பரிமாறப்படுகிறது என்று,தமிழகத்திலிருந்து மட்டுமின்றி,இந்தியா மற்றும் உலக அரங்குகளில் எத்தனையோ அமைப்புகளின் சார்பில் குரல்கள் எதிரொலித்தன.ஆனால் அப்போதெல்லாம் வாய்மூடி மௌனியாக இருந்த இந்திய அரசு,இபபோது இலங்கை தமிழர்களிடம் மன்னிப்புக் கோரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
 இனியாவது இந்தியஅரசு,தனது மறைமுக மற்றும் நேரடி உதவிகளை நிறுத்திக் கொள்ளுமா..?,

 இல்லை..எப்போதும் போல இந்தியஅரசு, தேர்தலிலும் நிற்காத..ஓட்டும் போடாத பிரதமர் மன்மோகன் சிங்கின் வாயால் சமாதானம் சொல்லுமா..?.

 இந்தியாவின் பாதுகாப்புக்காகத்தான்,இலங்கை அரசுக்கு உதவிவருவதாக இந்திய அரசும் அதிகாரிகளும் இதுவரை சொன்ன காரணங்கள் போதும்..,ஒரு நாட்டுமக்களைக் கொன்றுதான் இன்னொரு நாடு வாழவேண்டும் என்ற மன்னர் காலத்து மிருகஅரசியல் இனியும் வேண்டாமே..!.உயிர் என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான்.அது இந்தியாவாக இருந்தால் என்ன.? இலங்கையாக இருந்தால் என்ன..?.

எத்தியோப்பியாவுக்கு சென்று கடல் கொள்ளையர்களைப் பிடிக்கும் இந்திய அரசின் கப்பற்படை,இங்கேயுள்ள இந்திய,தமிழக மீனவர்களைக் கொல்லும் இலங்கை அரசின் ராணுவத்தை முடக்க முடியவில்லை என்பது யார் காதில் பூ சுற்றும் வேலை என்ற மக்களின் கேள்விகள் மத்தியஅரசின் காதில் விழவில்லையா..?




மூன்று மணி நேரம் இனி பவர்கட்..!



சென்னை: தமிழகத்தில் வரும் நாட்களில் மின் வெட்டை சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, தமிழக மின் வாரியம் கைவிரித்துள்ளது. மின் வெட்டு சரியாகி சகஜ நிலை திரும்ப சில வாரங்களாகும் என்பதால், சென்னையைத் தவிர மாநிலத்தின் மற்ற பகுதிகளில் பகலில் தினமும் மூன்று மணி நேரம் மின் வெட்டு அமலில் இருக்கும். அது மட்டுமின்றி, சென்னையிலும் இதுவரை இல்லாத வகையில், இப்போது மின் வெட்டு அமலுக்கு வந்துள்ளது. தினம் ஒரு மணி நேரம் சென்னையிலும் இனி மின் வெட்டு அமலில் இருக்கும் என, மின் வாரியம் கூறியுள்ளது.

தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கும், தொழிற்சாலைகளுக்கும் சீரான மின் வினியோகம் செய்ய முடியாமல், கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் திண்டாடி வருகிறது. இதற்கு தேவையான மின் உற்பத்தி இல்லை என கூறப்பட்டாலும், மின் உற்பத்தி நிலையங்களை சரியாக நிர்வகிக்காதது மற்றும் புதிய மின் திட்டங்களை உரிய வகையில் திட்டமிட்டு துவக்காதது போன்றவையே சரியான காரணங்களாகக் கூறப்படுகின்றன. மாநிலத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிக்க, பிற மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கப்பட்டு வந்தது. தற்போது, பிற மாநிலங்களிலும் மின் பற்றாக்குறை நிலவுவதால், அங்கிருந்தும் மின்சாரத்தை வாங்க முடியவில்லை. மின் உற்பத்தியில் கணிசமான அளவு பங்களித்து வந்த காற்றாலை மின் உற்பத்தியும் போதிய அளவு இல்லை. பருவ நிலை மாறியுள்ளதால், காற்றாலை மின் உற்பத்தியும் குறைந்துவிட்டது. அடுத்து வரும் மாதங்களில் நிலவும் பருவ நிலை மூலமே காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும். அதுவரை மின் பற்றாக்குறை நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில், வாக்காளர்களை மனதில் கொண்டு மின் வெட்டைக் குறைத்து அமல்படுத்தி வந்தனர். தற்போது, ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், வழக்கம் போல் மின் வெட்டு அமலுக்கு வந்துவிட்டது. மின் பற்றாக்குறை அதிகரித்து வருவதால், இதுவரை இல்லாத நிலையில், சென்னை மாநகரிலும், அறிவிக்கப்பட்ட மின் வெட்டு அமலுக்கு வருகிறது. எனவே, மின் பற்றாக்குறையை பொதுமக்கள் சமாளித்துக் கொள்ள வேண்டும் என்றும், அதனால் ஏற்படும் இடையூறுக்கு வருந்துவதாகவும் மின் வாரியம் கூறியுள்ளது.

வருத்தம்: இது குறித்து மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: மின் பற்றாக்குறை என்பது தமிழகம் போன்ற ஒரு சில மாநிலங்களில் மட்டுமே இருந்து வந்ததற்கு மாறாக, தற்போது நாடு முழுவதும் நிலவி வருகிறது. இதனால், மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்குத் தேவையான மின்சாரத்தை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சில வாரங்களுக்கு, இந்த மின் பற்றாக்குறை நீடிக்கும் எனத் தெரிகிறது. நிலவி வரும் மின் பற்றாக்குறையைச் சமாளிக்க, தமிழ்நாடு மின் வாரியம் வேறு மாநிலங்களிலிருந்து நாள் ஒன்றுக்கு 50 கோடி ரூபாய் அளவிற்கு, மின்சாரத்தை வாங்கியும் கூட, நிலைமையை சரி கட்ட முடியவில்லை. வேறு வழியில்லாமல், வீட்டு உபயோகத்திற்கான மின்சாரத்தில், நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் மின் வெட்டு என்பதற்குப் பதில், மூன்று மணி நேரம் பகலில் மின் வெட்டு செய்யப்படும். சென்னை மாநகரில் மட்டும், இதுவரை எவ்விதமான மின் வெட்டும் செய்யப்படாமலிருந்தது. இனி ஒரு மணி நேரம் பகலில் மின் வெட்டு இருக்கும். தவிர்க்க முடியாத நிலையில், மின் வாரியம் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைக்காக பெரிதும் வருந்துகிறோம்.

இன்னும் ஒரு சில வாரங்களில் காற்றாலைகள் மூலமாகக் கிடைக்கும் மின்சாரம் அதிகமாகக் கூடும் என்பதை எதிர்பார்த்து, அதுவரை எடுக்கப்படும் இந்த நடவடிக்கையைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு மின் வாரியம் தெரிவித்துள்ளது. நீர்மின் நிலையங்கள் மூலமும், காற்றாலை மூலமும் மின் உற்பத்தி அதிகரிக்கும் வரையில், அடுத்து வரும் மாதங்களில் மின் பற்றாக்குறை தொடரும். அதுவும் பகலில் மின் வெட்டு பற்றி மட்டும் முறையான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பல பகுதிகளில் பகலில் மூன்று மணி நேரம் மின் வெட்டு ஏற்படுத்துவது மட்டுமன்றி, இரவு நேரங்களில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. இதனால், அடுத்த சில வாரங்களுக்கு, தமிழகம் இருளில் மூழ்கும் அபாயம் உருவாகியுள்ளது.
 ------------------------------------------------------------------
யப்பா..என்ன ஒரு மாய்மாலம் புரிகிறது இந்த மின்வாரியம்..,ஏதோ கடந்த 4 மாதங்களாக மின்வெட்டே இல்லாத மாதிரியும்..இப்போதுதான் மின்வெட்டு அமல் படுத்துவது போலவும்..அதற்கு மக்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும்; அறிவிப்பு செய்திருக்கிறது.

கோவை,திருப்பூர்; உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த பல மாதங்களாகவே குறைந்தது மூன்று மணி நேரம் மின்வெட்டு அமலில் இருந்து வருகிறது.

தேர்தலுக்கு முன்பாக இந்த அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டு இருந்தால் சொந்தக்காசில் சூன்யம் வைத்துக் கொண்டது போல ஆகியிருக்கும் என்பது ஆளுங்கட்சிக்கு தெரிந்துதான் இருக்கிறது.அதனால்தான் இப்போது ஓட்டுப்பதிவுக்கு பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது என்று சாமானியர்களுக்கும் தெரியாதா..?..
 அரசியல்வாதிகள் எப்போதுமே அரசியல்வாதிகள்தான் என்று இப்போதும் நிரூபித்திருக்கிறார்கள். ஆனால்..மக்கள்..தேர்தல் முடிவுக்குப் பிறகு தெரியும்
.

உபரி தகவல் : புகார் வலை தளம் http://www.consumercomplaints.in/complaints/tamilnadu-electricity-board-c203688.html  தேடிப்பாருங்கள் எவ்வளவு புகார்கள் ....
  

Wednesday, 20 April 2011

அமைதியாய் இருந்தால் பாதிப்பில்லை!




குளிர் பிரதேசம் ஒன்றில் புரட்சி எண்ணம் கொண்ட சிட்டுக்குருவி ஒன்று தன் இனத்தோடு வாழ்ந்து வந்தது. இலையுதிர் காலத்தின் இறுதிக்கட்டம் நெருங்கியபோது மற்ற குருவிகள் அனைத்தும் தென் திசையை நோக்கி பறக்க ஆரம்பித்தன. ஆனால் இந்த இளம் சிட்டுக்குருவி மட்டும் அவைகளோடு செல்லக்கூடாது என்று தீர்மானித்து அங்கேயே தங்கிவிட்டது.

குளிர்காலம் வந்தது. குளிரின் ஆக்ரோசத்தில் அந்த சிட்டுக்குருவி கலங்கி விட்டது. கடைசியில் அதுவும் தெற்கு நோக்கி பறக்க தீர்மானித்த போது, அந்த குளிரின் கடுமையில் பறந்தால் மரணம் நிச்சயம் என்பதை அறிந்து அந்த இடத்திலேயே இருந்துவிட்டது. அதன் இறக்கைகளில் பனி படர்ந்து அதனை பறக்கவிடாமல் செய்ததால் அது மரத்தில் இருந்து கீழே ஒரு விவசாயி வீட்டு முற்றத்தில் விழுந்தது.

அப்போது அந்த முற்றத்தில் சென்று கொண்டிருந்த பசு ஒன்று அந்தச் சிட்டுக்குருவி மீது சாணத்தை போட்டுவிட்டு சென்றது. இதில் சிட்டுக்குருவிக்கு மூச்சுத்திணறினாலும், சாணத்தின் வெப்பம் குளிருக்கு இதமாக இருந்தது.

சூட்டினாலும், மூச்சுவிட முடிந்ததாலும், மகிழ்ச்சியடைந்த அந்த சிட்டுக்குருவி பாட ஆரம்பித்தது. பாட்டுச்சத்தம் கேட்டு அந்தப்பக்கமாக வந்த பூனை சத்தம் திசையை மோப்பம் பிடித்து சாணத்தை விலக்கிப் பார்த்தது. பறவையை பார்த்ததும் சந்தோசமாக அதனை விழுங்கிவிட்டது.

இந்த கதை கூறும் மூன்று நீதிகள்

1) உன் மீது சாணம் போடுபவன் உன் எதிரியாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

2) உன்னை சாணத்தில் இருந்து அகற்றுபவன் உன் நண்பனாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை.

3) நீ மகிழ்ச்சியாய் இருக்கிறாய், சாணத்தின் இதமான சூட்டில் அடங்கி இருக்கிறாய் என்றால் வாயை மூடிக்கொண்டிரு.


Friday, 8 April 2011

லோக்பால் என்றால் என்ன..?



அரசு அதிகாரிகள் மீது சுமத்தப்படும், ஊழல், மெத்தனம், பாரபட்சம் போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கோர்ட் போன்ற அரசு அமைப்பு தான் லோக்பால். பொதுமக்கள், அரசு அதிகாரிகள் மீது லோக்பாலிடம் புகார் கொடுக்கலாம். அந்த புகாரை லோக்பால் விசாரித்து, நடவடிக்கை எடுக்கும். லோக்பால் உருவானால், துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஊழல் கட்டுப்படுத்தப்படும் என்ற பொது கருத்து நிலவுகிறது. லோக்பாலின் செயல்பாடுகள், அதிகாரங்கள் போன்றவற்றை நிர்ணயிக்கும் சட்டம் தான் லோக்பால் சட்டம்.


இப்போதுள்ள ஊழல் குறித்த சட்டங்கள் எவை?
இந்திய தண்டனை சட்டம், 1860 மற்றும் ஊழல் தடுப்பு சட்டம், 1988 ஆகியவை, அரசு அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இவற்றின் படி நடவடிக்கை எடுக்க, போலீசோ, வேறு புலனாய்வு துறையோ, மாநில, மத்திய அரசுகளிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். அரசில் நிர்வாக துறையை பொறுத்தவரை மத்திய புலனாய்வு துறை மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு துறை ஆகிய இரண்டு மட்டுமே, ஊழல் வழக்குகளை கையாள்வதில் பிரதானமாக செயல்படுகின்றன.

லோக்பால் அமைப்பினால் என்ன லாபம்?
இது முறையாக நிறுவப்பட்டால், அரசின் சட்டத்துறை மற்றும் நிர்வாகத் துறையின் கலவையாக இருக்கும். புகார்களை பெற்று விசாரணை நடத்துவதில் நிர்வாகத் துறையை போன்றும், தண்டனை கொடுப்பதில் நீதித் துறையை போன்றும் செயல்படும். மக்களின் பிரச்னை, அலைக்கழிப்பு இல்லாமல் ஒரே இடத்தில் தீர்க்கப்படும்.

இதே போல் இந்தியாவில் வேறு அரசு நிறுவனம் உள்ளதா? 
ஆந்திரா, அசாம், பீகார், சத்திஸ்கர், டில்லி, குஜராத், ஜார்க்கண்ட், அரியானா, இமாச்சல பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்கள், லோக் ஆயுக்தா மற்றும் உபலோக் ஆயுக்தா அமைப்புகளை உருவாக்கியுள்ளன. இவை, மாநில அளவில் லோக்பாலின் வேலைகளை, குறுகிய அளவில், அதிகாரமற்ற நிலையில் செய்து வருகின்றன. இவற்றில் பிரபலமானது, கர்நாடகாவில் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையில் இயங்கும் லோக் ஆயுக்தா. இது கர்நாடகாவில் அரசியல் பலம் படைத்த பெல்லாரி சகோதரர்களின் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டியது.


இந்த சட்டம் எப்போது அமலுக்கு வரும்? 
கடந்த 1968 முதல், லோக்சபாவில் எட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டு, தகுந்த காலவரைக்குள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தற்போது நிலவும் தொடர் ஊழல் சூழலில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், ஊழலை தடுக்க நடவடிக்கைகள் பரிந்துரைக்க, மத்திய அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதில் லோக்பால் மசோதாவின் வடிவம் மற்றும் அதை மீண்டும் அறிமுகப்படுத்துவது பற்றி பரிந்துரைக்கப்பட்டது. லோக்பால் மசோதாவின் வடிவம் குறித்து போராடி வரும் அன்னா ஹசாரே உட்பட அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொண்டால், இந்த ஆண்டே லோக்சபாவில் நிறைவேற வாய்ப்பு உள்ளது.

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் ஏன்? 
தற்போது அரசுக்கு பரிசீலிக்கப்பட்ட லோக்பால் சட்டம் மிகவும் பலவீனமானது. அதன்படி உருவாக்கப்படும் அமைப்புக்கு, பரிந்துரை செய்யும் அதிகாரங்கள் மட்டுமே இருக்கும். இதுவரை வெவ்வேறு அரசு ஆணையங்கள் லோக்பால் குறித்து செய்த பரிந்துரைகளை சேர்த்து, சட்டத்துக்கு வலிமையூட்டும் வகையில், அன்னா ஹசாரே தலைமையில், ஒரு சமூக ஆர்வலர் குழு, மாதிரி மசோதா தயார் செய்திருந்தது. அந்த மாதிரி மசோதாவின் அடிப்படையில் புதிய லோக்பால் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று கோரி, அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்கின்றார்.


பரிந்துரைக்கப்பட்டுள்ள லோக்பால் மசோதாவில் உள்ள குறைகள்


நாட்டின் பிரதமர், அமைச்சர்கள், எம்.பி.,க்கள் மீது மட்டுமே லஞ்சம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தும் உரிமை கொண்டது.

* லஞ்சம் தொடர்பான விசாரணையை துவங்கவோ, பொதுமக்களிடம் இருந்து நேரடியாக புகார்களை பெறவோ அதிகாரம் கொடுக்கப்படாது. புகார்களைப் பெறுவதற்கென நியமிக்கப்படும், எம்.பி.,க்கள் மூலமே, அவை பெறப்படலாம்.


* புகாரில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது; அமைச்சர்கள் மீதான புகார் குறித்து பிரதமரிடமோ, பிரதமர், அமைச்சர்கள் மீதான புகார் குறித்து, புகார்களை பெற நியமிக்கப்பட்டுள்ள எம்.பி.,க்களிடமோ சிபாரிசு மட்டுமே செய்ய முடியும்.

* காவல் துறைக்கான அதிகாரம், லோக்பால் அமைப்புக்கு கொடுக்கப்படாது. எனவே, எந்த புகார் மீதும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது.

* லோக்பால் அமைப்பில் தவறான புகார் தெரிவித்தது உறுதி செய்யப்பட்டால், புகார் கொடுத்தவருக்கு ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும்.

இந்த அமைப்பை நிர்வகிக்க, ஓய்வு பெற்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய கமிட்டி ஒன்று உருவாக்கப்படும்.

இவர்கள் மூவரும் இணைந்து, லோக்பால் அமைப்புக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பர். உறுப்பினர்கள் அனைவரும், அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களாக, குறிப்பாக ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்களாக இருப்பர்.

* நாட்டின் பாதுகாப்பு, ராணுவம், வெளியுறவு தொடர்பாக, பிரதமருக்கு எதிராக புகார் வந்தால், அது குறித்து விசாரிக்க பரிந்துரை செய்ய, இந்த அமைப்புக்கு அதிகாரம் கிடையாது.

* புகாரின் அடிப்படையில் விசாரணையை ஆறு மாதத்தில் இருந்து ஓராண்டிற்குள் துவக்க வேண்டும். ஆனால், எவ்வளவு மாதங்களில், ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்பது வரையறுக்கப்படவில்லை.

லஞ்ச அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, சிறைத் தண்டனை பெற்ற பின்னர் சம்பந்தப்பட்டவர், தவறான வழிகளில் ஈட்டிய சொத்துக்களை அனுபவிப்பதற்கு, இந்த அமைப்பின் மூலம் தடை ஏதும் விதிக்கப்படவில்லை.


அன்னா ஹசாரே வலியுறுத்தும் ஜன் லோக்பால் மாதிரி மசோதா விவரம்

* அரசியல்வாதிகள், அதிகாரிகள், நீதிபதிகள் மீதும் லஞ்சம் தொடர்பான நீதி விசாரணை நடத்த லோக்பால் கட்டுப்பட்டது. மத்திய ஊழல் கண்காணிப்பு கமிட்டி மற்றும் மத்திய அரசின் அனைத்து கண்காணிப்பு அமைப்புகளும், லோக்பால் அமைப்பிற்குள் கொண்டு வரப்படும்.

* பொது மக்களிடமிருந்து, புகார்களை நேரடியாகப் பெற்று, நடவடிக்கை எடுக்கலாம். யாரிடமும் சரிபார்க்க வேண்டிய அவசியமோ, அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.

* புலனாய்வு முடிந்ததும், வழக்கு தொடரலாம்; ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் அல்லது இரண்டையும் மேற்கொள்ளலாம்.

* லோக்பால் அமைப்புடன் சி.பி.ஐ., இணைக்கப்பட்டு விட்டால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் அதிகாரம், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் புலனாய்வு செய்தல், வழக்கு தொடர்தல் ஆகியவை மேற்கொள்ள முடியும்.

* லோக்பால் அமைப்பில் ஒரு தலைவர், 10 உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பர். இவர்களில் 4 பேருக்கு மட்டுமே முன் அனுபவம் இல்லாத வக்கீல்களாக இருக்கலாம்.

தேர்வு கமிட்டியில் சட்டம் தொடர்பான பின்னணி உடையவர்கள், தலைமை தேர்தல் கமிஷனர், மத்திய கணக்கு தணிக்கை அலுவலக தலைவர், ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல்கள், லோக்பால் அமைப்பில் இருந்து வெளியேறும் உறுப்பினர்கள் இடம் பெற வேண்டும்.

* லோக்பால் அமைப்பின் முழு அதிகாரத்தையும் பயன்படுத்த எந்த தடையும் இருக்க கூடாது.

* ஓராண்டிற்குள் புலனாய்வை முடிக்க வேண்டும். இது தொடர்பான வழக்கு விசாரணையை அடுத்த ஓராண்டிற்குள் முடிக்க வேண்டும்.

* ஊழல் நிரூபிக்கப்பட்டால், ஊழலில் தொடர்புடைய அனைவரிடமிருந்தும் இழப்பீடு பெறப்பட்டு, அரசு இழப்பைச் சரிகட்ட வேண்டும்.


thanks to dinamalar.com

தகாத சொல்: தமிழின தலைவர்



இட்லி வடையில் http://idlyvadai.blogspot.com/2011/04/blog-post_3161.html

இப்பதிவிற்கு திரு  வந்தியத்தேவன் said...

காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடைப்பட்ட நேரத்தில் நம் தமிழின தலைவர்(மன்னிக்கவும்..) உண்ணாவிரதம்
இருந்தால் நம் கலைஞர் டிவி செய்தியில் நான்கு நாட்களுக்கு நிமிடத்திற்கு நான்கு முறை காண்பிப்பார்கள்.

குறிப்பு: (மன்னிக்கவும் ..) : தகாத சொற்கள் பயன்படுத்தியதற்காக
தகாத சொல் : தமிழின தலைவர் 

thanks to vandhiyadevan & idlyvadai.blogspot.com